லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் வேட்டையாடிய ஷுப்மன் கில், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார்.
ஒட்டுமொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் 585 ரன்கள் வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில்லிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளனர். கருண் நாயர் மட்டுமே இதுவரை அரை சதத்தை கூட எட்ட முடியாமல் தடுமாறி வருகிறார். அவரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.
எட்ஜ்பாஸ்டன் போட்டியில் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். நித்திஷ் குமார் ரெட்டி மட்டுமே ஏமாற்றம் அளித்திருந்தார். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆகாஷ் தீப் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 10 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதேவேளையில் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் கைப்பற்றிய 6 விக்கெட்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் பும்ரா, லார்ட்ஸ் போட்டியில் களமிறங்குகிறார். இதனால் பிரசித் கிருஷ்ணா நீக்கப்படுவார். பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர், இரு போட்டிகளிலும் கூட்டாக 6 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியிருந்தார். பும்ரா களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு துறை மேலும் வலுவடையக்கூடும். முகமது சிராஜ், கடந்த 2021-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தட்டையான ஆடுகளங்களில் அதிக ரன்கள் வேட்டையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் பாணியில் முதன்முறையாக எட்ஜ்பாஸ்டன் போட்டியில் பின்னடைவை சந்தித்து இருந்தது. தொடக்க வீரரான ஸாக் கிராவ்லியிடம் இருந்து கடந்த போட்டியில் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. மேலும் பென் ஸ்டோக்ஸும் மட்டை வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதேபோன்று ஜோ ரூட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினார்.
அதேவேளையில் எட்ஜ்பாஸ்டனில் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக ஜோப்ரோ ஆர்ச்சர் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஜோஷ் டங்க் நீக்கப்பட்டுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர், இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.5 வருடங்களுக்கு பிறகு.. இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கை மற்றும் முதுகுவலி காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், நான்கரை ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக அவர், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.
கடந்த மாதம் முதல்தர கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 18 ஓவர்களை வீசி உடற்தகுதியை நிரூபித்ததை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளார். இதே மைதானத்தில்தான் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாகியிருந்தார்.
அப்போது அந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 2 சதங்கள் விளாசி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். எனினும் லார்ட்ஸ் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் தனது பவுன்ஸர்களால், ஸ்டீவ் ஸ்மித்தை திணறடித்தார். இதே போன்ற சூழ்நிலையில்தான் தற்போது அவர், அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இம்முறை இந்திய அணியின் நட்சத்திரமான ஷுப்மன் கில் 2 போட்டிகளிலேயே 500 ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளார். இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஷுப்மன் கில் கடும் சவால் அளித்தார். இதனால் ஷுப்மன் கில், ஜோப்ரா ஆர்ச்சர் இடையிலான மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.
நேரம்: பிற்பகல் 3.30, நேரலை: சோனி ஸ்போர்ட்ஸ், ஜியோஹாட் ஸ்டார்