லீட்ஸ்: இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 24.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 48 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்தார்.
பென் டக்கெட் 5, ஜோ ரூட் 14, கேப்டன் ஹாரி புரூக் 12, ஜாஸ் பட்லர் 15, ஜேக்கப் பெத்தேல் 1, வில் ஜேக்ஸ் 7, ஜோப்ரா ஆர்ச்சர் 0, சோனி பேக்கர் 0, ஆதில் ரஷித் 9 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகாராஜ் 4, வியான் முல்டர் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் 55 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசி ஆதில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். தெம்பா 6, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்களில் வெளியேறினர்.
ரியான் ரிக்கெல்டன் 59 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.