ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று (ஜூன் 20) ஹெடிங்லீயில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார்.
மேலும் 4 முழுநேர பவுலர்கள் அணியில் இருப்பார்கள். ஆகவே 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுதல்தான் வெற்றிக்கு வழி வகை செய்யும். எவ்வளவுதான் ரன்கள் அடித்தாலும் போட்டியை வெற்றி பெற எதிரணியின் 20 விக்கெட்டுகள் அவசியம் என்கிறார் ஷுப்மன் கில்.
“இதுதான் எங்கள் முக்கிய விவாதப்புள்ளியாக இருந்தது. எப்படி 20 விக்கெட்டுகளைச் சாய்ப்பது என்பதுதான் விவாதமே. பியூர் பேட்டர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 4 முறையான பவுலர்கள் என்றே அணியின் சேர்க்கை இருக்கும்.
கேப்டன்சி சுமை எல்லாம் இல்லை. ஏனெனில், உள்ளபடியே கூற வேண்டுமெனில் பேட்டிங்கில் களமிறங்கும் போது நான் கேப்டன் என்ற சுமை அழுத்தம் இல்லாமல் வெறும் பேட்டராகவே சிந்திப்பேன். எதிரணி பவுலர்களை எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்றுதான் யோசிப்பேன். தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதையே விரும்புகிறேன்.
எதிரணியினர் கேப்டனை குறிவைப்பார்கள் என்று தெரியும். ஆனால், எல்லா வீரர்களும் முக்கியமானவர்கள் என்றே அவர்கள் கருதுவார்கள். ஆகவே, கேப்டனான என்னை ஒரு சிறப்புக் குறிவைத்துத் தாக்குவார்கள் என்பதெல்லாம் பற்றி நான் யோசிக்கவே இல்லை” என்றார்.
இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சுற்றின் தொடக்கம் மட்டுமல்ல, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய யுகத்தின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. புதிய, இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. இங்கிலாந்தும் அப்படித்தான் 2011, 2014, 2018 அல்லது 2021-22-ல் இருந்த இங்கிலாந்து அணியல்ல. அங்கும் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. பிராட், ஆண்டர்சன் போன்றோர் ஓய்வு பெற்று விட்டனர். ஆலி ராபின்சன் இப்போதைய செட் அப்பில் சரியாகப் பொருந்த மாட்டார் என்று மெக்கல்லம் அண்ட் கம்பெனி அவரைக் கழற்றி விட்டுள்ளது.
மார்க் உட், அட்கின்சன், ஆர்ச்சர் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்து அணியில் இல்லை. ஆனால், இந்திய அணியில் ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஜாஷ் டங் இந்திய அணிக்கு அபாயகரமான பவுலரே.
உத்தேச இந்திய அணி: ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, பும்ரா, சிராஜ்.