கோலாலம்பூர்: மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், அபய் சிங் ஜோடி 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நூர் ஜமான், நசீர் இக்பால் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் நடைபெற்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் மலேசியாவின் அய்னா அமனி, ஸின் யிங் யி ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அனஹத் சிங் 2-0 (11-9, 11-7) என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், அமீசன்ராஜ் சந்திரன் ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் 28 நிமிடங்கள் நடைபெற்றது.