மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ரமேஷ் புதிஹால்.
இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து அசத்தினார்.
அரை இறுதியில் ரமேஷ் புதிஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய சர்ஃபர் என்ற பெருமையை பெற்றார்.
இறுதிப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களை தென் கொரியாவின் கனோவா ஹீஜே (15.17), இந்தோனேசியாவின் பஜார் அரியானா (14.57) ஆகியோர் பிடித்தனர்.