ஹாங்சோ: ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 4 சுற்றில் இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் சீனாவிடம் தோல்வி கண்டது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.
சூப்பர் 4 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் சீனா, தென் கொரிய அணிகள் மோதின. இதில் சீனா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை சீனா, இந்திய அணிகள் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 14) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, சீன அணிகள் மோதுகின்றன.