ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது நிச்சயமற்றதாக இருந்தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.
ஆனால் பாகிஸ்தான் ஹாக்கி அணி பாதுகாப்பு காரணங்களை கூறி வரமறுத்தது. இந்நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான், ஓமன் அணிகளுக்கு பதிலாக வங்கதேசம், கஜகஸ்தான் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும் ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான கொரியா, மலேசியா, சீன தைபே, வங்கதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மலேசியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா – சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.