துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் வரும் 14-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதுவதற்கான சிறந்த பயிற்சி ஆட்டமாக இந்திய அணிக்கு அமையக்கூடும். பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில் மீண்டும் திரும்பி உள்ளதால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகக்கூடும். ஏனெனில் சாம்சன் முதல் 3 இடங்களுக்குள் விளையாடக்கூடியவர். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கும் பட்சத்தில் 3-வது வீரராக திலக் வர்மா விளையாடக்கூடும்.
ஏனெனில் இந்த இடத்தில் அவர், கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும், அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கக்கூடும். 6-வது இடத்தில் ஷிவம் துபே இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா 7-வது இடத்தில் விளையாடக்கூடும். விதர்பாவை சேர்ந்த ஜிதேஷ் சர்மா ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். ஐபிஎல் தொடரில் அவர், ஆர்சிபி அணிக்காக இம்முறை சிறப்பாக விளையாடி இருந்தார்.
8-வது இடத்தில் அக்சர் படேல் இடம் பெறக்கூடும். பிரதான வேகப்பந்து வீச்சாளர்காக ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் களமிறங்குவார்கள். அதேவேளையில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும். ஐக்கிய அரபு அமீரக அணியை பொறுத்தவரை, இந்த ஆட்டம் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். ஏனெனில் ஜஸ்பிரீத் பும்ராவை எதிர்கொள்வது அல்லது ஷுப்மன் கில்லுக்கு பந்துவீசுவது என்பது ஐசிசி உறுப்பு நாட்டின் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஆசிய கோப்பை தொடர் அந்த அணிக்கு உயர்மட்ட அளவிலான போட்டிகளை விளையாடுவதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பதாக அமையக்கூடும்.
‘எப்போதும் ஆக்ரோஷமே’ – இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “களத்தில் ஆக்ரோஷம் என்பது எப்போதும் இருக்கும். ஆக்ரோஷம் இல்லாமல் இந்த விளையாட்டை விளையாட முடியாது. எங்களுக்கு சில பயிற்சி அமர்வுகள் மட்டுமே உள்ளன. எனினும் நன்றாகவே உணர்கிறோம். ஆசிய கோப்பையில் சிறந்த அணிகளுடன் விளையாடுவது நல்ல சவாலாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரக அணி அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சில ஆட்டங்களில் நெருங்கி வந்தனர். ஆசிய கோப்பையில் அவர்கள் எல்லையைக் கடப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
‘எளிதாக விடமாட்டோம்’ – ஐக்கிய அரபு அமீகரத்தின் பயிற்சியாளராக உள்ள லால்சந்த் ராஜ்புத் கூறும்போது, “ஷார்ஜாவில் சமீபத்தில் முடிவடைந்த முத்தரப்பு டி 20 தொடரில் விளையாடியதன் மூலம் ஆசிய கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். முத்தரப்பு தொடரின் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் 5 விக்கெட்களை 100 ரன்களுக்குள் கைப்பற்றினோம். அந்த ஆட்டம் நெருக்கமாக அமைந்திருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிக்கு எதிராக எங்களை சோதித்துப் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கடினமான போட்டிதான், ஆனால் எங்கள் வீரர்கள் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” என்றார்.
அணிகள் விவரம்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.
நேரம்: இரவு 8,
நேரலை: சோனி