துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷாத் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஷிவம் துபே, 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் ரிஷாத் கைப்பற்றினார். 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, ரன் அவுட் ஆனார். அது இந்த ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மாவும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
6-விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்டியாவும், அக்சர் படேலும் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். அக்சர் 10 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 169 ரன்கள் எடுக்க வேண்டும்.
வங்கதேச பந்து வீச்சாளர்களில் ரிஷாத் 2, முஸ்தாபிசூர் ரஹ்மான், சைபுதீன் மற்றும் தன்சிம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் லிட்டன் தாஸ் விளையாடவில்லை.