அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் இந்த ஆட்டம் தொடங்க தாமதமானது. இதில் வெற்றிபெற்று பஞ்சாப் கிங்ஸ் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முழுவதும் வெப்பமான சூழல் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாலை மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான இறுதிப் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக இடையூறு ஏற்படலாம் என தகவல்.
பிளேயிங் கண்டிஷன் விதிமுறைகளின் படி மழை காரணமாக ஆட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடத்த முடியாமல் போனால் ரிசர்வ் நாளான புதன்கிழமை அன்று ஆட்டம் நடத்தப்படும். அன்றும் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.