புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் முதன்மையான ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் 12,261 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்துடன் ஐடி அமைச்சகம் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளது. பணி நீக்க அறிவிப்புக்கு காரணமான பின்னணி என்ன என்பதை அறியும் முயற்சியில் ஐடி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.