மவுண்டன் வியூ: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இது ப்ளூம்பெர்க் பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்களும் பலன் அடைந்துள்ளனர். ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கணிசமாக அதிகரித்தது இதற்கு காரணம் எனத் தெரிகிறது.
இதன் மூலம் நிறுவனர் அல்லாத சிஇஓ பிரிவில் 10 இலக்க சொத்து மதிப்பை கொண்டுள்ளவர்களின் பட்டியலில் ஒருவராக சுந்தர் பிச்சை இணைந்துள்ளார். தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ.8,000+ கோடி.
தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. 53 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 2015 முதல் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார்.