கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள துரித உணவு விற்பனையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பான முறையில் மையோனைஸ் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கினர்.
கூட்டத்தில், கோவை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமை வகித்து பேசும்போது, “தமிழ்நாட்டில் பச்சை முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’-க்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் பொருட்களை உட்கொள்ளும்போது உடல் நலன் கடுமையாக பாதிக்கப்படும்.
சைவ முறையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் மற்றும் புதிய முட்டைகளை 15 முதல் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை வேகவைத்த பின்னர், அதன் வெள்ளை நிற பகுதியை எடுத்து மையோனைஸ் தயாரிக்கலாம்.
சுத்தம், சுகாதாரம் மிக முக்கியம். பழைய பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து மறுநாள் பயன்படுத்தக் கூடாது. தரச்சான்று பெற்றிருத்தல் அவசியம். உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பார்வைத் திறன் நல்ல முறையில் இருத்தல் அவசியம். அனைத்து விதிமுறைகளையும் உணவு தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.