சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. அப்போது கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.65 வரை விலை உயர்ந்திருந்தது. தற்போது இச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.
மற்ற காய்றிகளான பீன்ஸ் ரூ.80, முருங்கைக்காய் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.50, அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய், நூக்கல் தலா ரூ.25, பாகற்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20, கேரட், பீட்ரூட் தலா ரூ.15, தக்காளி ரூ.13, புடலங்காய், முள்ளங்கி தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
வெஙகாயம் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது வரத்து அதிகமாக வருகிறது. அறுவடை பருவமும் முடிந்திருக்கிறது. அதனால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு விலை உயர வாய்ப்புள்ளது” என்றனர்.