தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.70,160-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த மார்ச் 16-ம் தேதி ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த 10-ம் தேதி ஒரு பவுன் ரூ.68,480, கடந்த 11-ம் தேதி ரூ.69,960 என அதிகரித்தது.
இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,745-க்கும், ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.25 என பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.8,770-க்கும், ஒரு பவுன் ரூ.70,160-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,567, ஒரு பவுன் ரூ.76,536 என இருந்தது.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியபோது, ‘‘அமெரிக்க அரசு தொடங்கியுள்ள வர்த்தக போர் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். மேலும், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு தொடரும்’’ என்றனர். வரலாறு காணாத வகையில், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.70,000-ஐ தாண்டியதால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.108-ல் இருந்து நேற்று ரூ.2 அதிகரித்து ரூ.110-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,10,000 ஆக இருந்தது.