புதுடெல்லி: அமெரிக்க முதலீட்டாளரும், நிதி விமர்சகருமான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உலகின் பாதுகாப்பான முதலீட்டுக்கான தளமாக மாற இந்தியா தயாராகி வருகிறது. வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் இந்தியாவிடம் உள்ளது. பல தசாப்தங்களாக முதலீட்டு உலகில் இருக்கிறேன். வாழ்க்கையில் முதல் முறையாக டெல்லி மக்கள் பொருளாதாரத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்வதை பார்க்கிறேன்.
இந்தியா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டு அதனை செய்ய முயற்சிக்கிறார்கள். அது இந்தியாவுக்கும் உலகுக்கும் அற்புதமாக இருக்கும். இந்தியா உண்மையில் முழு உலகத்துடனும் திறந்த வர்த்தகத்தில் ஈடுபட முடிந்தால், அதனால் நாட்டின் எதிர்காலம் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும்.
இந்தியாவில் எனக்கு முதலீடுகள் இல்லை. ஆனால் தற்போது, நான் உண்மையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன். சந்தை சரிந்து சிறிது காலத்துக்கு மந்தமாக இருந்தால் அதனை சிறந்த முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தி அதிக பணத்தை முதலீடு செய்வேன்.இவ்வாறு ரோஜர்ஸ் தெரிவித்தார்.
2025-ம் ஆண்டில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நாமினல் ஜிடிபி 4,187.017 பில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜப்பானின் ஜிடிபி அளவான 4,186.431 பில்லியன் டாலரைக் காட்டிலும் அதிகம் என்பது ஐஎம்எப் சமீபத்திய உலக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.