புதுச்சேரி: விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும், ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்காகும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மாநாட்டில் ‘டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களை மேம்படுத்துதல்: நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் மத்திய பல்கலைக்கழக கலாச்சார அரங்கில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்தக் கருத்தரங்கில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியது: “கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தொடங்கி வைத்த சீர்திருத்தங்களால் சராசரி இந்தியரின் சுயமரியாதை கணிசமாக மேம்பட்டுள்ளது. மக்கள் நாட்டைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதில் விண்வெளி மற்றும் கடல் ஆகியவை சாத்தியமான துறைகளாக உள்ளன. சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கான குழுத் தலைவர் ஷுபன்ஷு சுக்லாவின் பயணம் குறிப்பிடத்தக்கது. நமது விண்வெளிப் பொருளாதாரம் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காணவுள்ளது. தற்போது சுமார் 8 பில்லியன் டாலர்களாக இருக்கும் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் பத்து மடங்கு வளர்ச்சியைக் காணும்.
தற்போது சுமார் 80 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கு உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், சுமார் 55.22 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு திட்டங்களின் கீழ், நேரடிப் பலன் பரிமாற்ற முறை மூலம் பயனாளிகளுக்கு சுமார் 44 லட்சம் கோடி ரூபாயை அரசு தர முடிந்தது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சரத் சவுகான், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி வந்த மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது புதுச்சேரி கடற்கரையை மேம்படுத்துவது, புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா சுற்றுலா தளமாக மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.