ஓசூர்: ஆண்டு முழுவதும் சந்தையில் நல்ல விலை கிடைத்த நிலையில், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் உருளைக் கிழங்கை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், பீ்ட்ரூட், நூல்கோல், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியி்ல் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஓசூர் பத்தளப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதில், பாகலூர், சூளகிரி, பேரிகை பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்பம் உருளைக் கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இப்பகுதியில் விளையும் உருளைக்கிழங்கு செந்நிறத்தில் விளைவதாலும், இனிப்பு சுவையுள்ளதாலும், பொதுமக்கள் சமையலுக்கு அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். இதனால், ஓசூர் உருளைக் கிழங்குக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, உள்ளூரில் மகசூல் அதிகரிப்பு மற்றும் வடமாநில வரத்து அதிகரித்துள்ளதால் உருளைக் கிழங்கு விலை சரிந்துள்ளது.
இதுதொடர்பாக ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் சந்தையில் தினசரி தேவையுள்ள கேரட், பீ்ட்ரூட், பீன்ஸ், உருளைக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறோம். இங்கு விளையும் உருளைக் கிழங்குக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும், சந்தை வாய்ப்பு உள்ளதாலும் மேட்டு நிலம், சமவெளிப் பகுதியில் சாகுபடி செய்து வருகிறோம். சந்தையில் ஆண்டு முழுவதும் ஒரு கிலோ உருளை ரூ.40 முதல் ரூ.50 வரை விலை இருக்கும். இதனால், எங்களுக்கு இச்சாகுபடி வருவாய் இழப்பின்றி கைகொடுத்து வருகிறது.
தற்போது, உள்ளூரில் மகசூல் அதிகரிப்பு மற்றும் வடமாநிலங்களிலிருந்து வரத்து அதிகரித்து, கிலோ ரூ.25-க்கு விற்பனையாகிறது. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உருளைக் கிழங்கைப் பொறுத்த வரையில் 120 நாட்களில் அறுவடை பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்கள் அதிகரித்தால் கிழங்குகளில் புழுக்கள் பாதிப்பு ஏற்படும்.
எனவே, அறுவடையும் தவிர்க்க முடியாமல் கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் உருளைக் கிழங்கை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.