புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைவான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்படும். இது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்படும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஆண்டு அல்லது 200 முறை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பாஸ் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்எச்ஏஐ இணையதளம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் விரைவில் லிங்க் செயல்பாட்டுக்கு வரும்.
60 கி.மீ. வரம்புக்குள் அமைந்துள்ள சுங்கச் சாவடிகள் தொடர்பான நீண்டகால கோரிக்கைகளுக்கு இது தீர்வாக அமையும். அத்துடன் குறைவான மற்றும் ஒரே பரிவர்த்தனை மூலம் சுங்க கட்டணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. இதனால் காத்திருப்பு நேரம் குறைவதுடன் வாகன நெரிசலும் குறையும். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும். இதனால் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயனடைவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.