சென்னை: ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு அரசு ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் என்பது அதீத வளர்ச்சியை தினந்தோறும் கண்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.2000-க்கு மேலான ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இது ஏற்கப்பட்டால் 18 சதவீதம் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நடைமுறைக்கு வந்தால் யுபிஐ பரிவர்த்தனையில் பெரிய மாற்றம் நிகழும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது. “ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது, மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் எந்த அடிப்படையும் இல்லாதது. இப்போது அது மாதிரியான திட்டம் எதுவும் அரசாங்கத்தின் வசம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
யுபிஐ @ இந்தியா: இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-20 நிதி ஆண்டில் ரூ.21.3 லட்சம் கோடி என இருந்த யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு, கடந்த மார்ச் மாதத்தில் ரூ.260.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.