ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதுகுறித்து பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, தங்க நகைகளின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது வாடிக்கையாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டுதலின் பேரில் புதிய வரைவு விதிமுறைகளை பரிசீலித்த நிதி சேவைகள் துறை, ரிசர்வ் வங்கிக்கு தனது பரிந்துரையை அனுப்பி இருந்தது. அதில், ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு புதிய வரைவு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்க நகைகளின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும். இது தொடர்பான இறுதியான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
இது புதிய வரைவு விதிமுறையில் இடம்பெற்றிருந்த 75 சதவீதத்தைவிட 10% அதிகம். அதாவது நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றால் ரூ.85 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
மேலும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு இந்த வரம்பு 80 % ஆக இருக்கும் என்றும் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு 75% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.