வனத்துறை அலுவலகத்தில் அரசு சார்பில் ரூ.2.32 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் பழுதடைந்து நிற்கின்றன. அவற்றை பழுது பார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும், பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு நாற்றங்கால் உற்பத்தி, நடவுப்பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வனப்பகுதியில் பணிபுரியும் வனவர்கள், வனக்காப்பாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழக வனத்துறையில் புதிதாக, 200 மின்சார இருசக்கர வாகனங்கள் ரூ.2.32 கோடி செலவில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வன பிரிவு அலுவலகங்களுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல்வரால் வழங்கப்பட்டது.
மேலும், இருசக்கர வாகனங்களை இயக்குதல், பராமரிப்பு மற்றும், சார்ஜ் செய்வது குறித்த அடிப்படை பயிற்சிகள் வனப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது இந்நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் இயங்கிய இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் தற்போது பழுதடைந்து விட்டன.
இதனை சீரமைக்க முடியாததால் வனத்துறையின் அனைத்து பிரிவு அலுவலங்களிலும் மின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தை வனத்துறையினர் அணுகிய போது, தமிழக அரசு விற்பனைக்கு மட்டுமே எங்களிடம் ஒப்பந்தம் போட்டதாகவும், அதனை சீரமைக்க ஒப்பந்தம் இல்லை என்பதால் அதனை சரி செய்ய முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். எதற்காக இந்த வாகனங்கள் வாங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், மக்களின் வரிப்பணம், அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது இவற்றை சரி செய்து மீண்டும் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நல்ல நோக்கத்துக்காக மின்சார இருசக்கர வாகனம் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காக இந்த வாகனத்தை இயக்குபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது, 80 சதவீத வாகனங்கள் பழுதடைந்து அனைத்து அலுவலகங்களிலும் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது. வெளி சந்தையில் சென்று பழுதை சரி செய்யலாம் என்றால் பலருக்கு இந்த வாகனத்தின் தொழில்நுட்பம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சீரமைக்க ஆயிரக்கணக்கில் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பழுதடைந்த வாகனங்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தான் இதை சரி செய்ய வேண்டும் என அந்த நிறுவனத்தை அணுகியபோது, வாகனம் பழுதடைந்தால் அதனை சீரமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை என கூறப்படுகிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையால் அனைத்து அரசுத் துறை வாகனங்களுக்கும் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மின்சார இருசக்கர வாகனங்களை சீரமைக்கும் வசதி இல்லை. இதுகுறித்து துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.