ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. ரயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் விற்கப்படும் “ரயில் நீர்” பாட்டில் விலையை ரூ.1 குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை: ரயில் நிலையங்களில் விற்கும் ரயில் நீர் பாட்டில் மற்றும் இதர தண்ணீர் பாட்டில் விலை ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் நீர் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9 ஆகவும் விற்கப்பட உள்ளது. மேலும், இதர தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்படவுள்ளது. இது நாளை (22-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.