‘மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்துசெய்ய வேண்டும்’ என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, செய்தியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் வீடுகள், தொழிற் சாலைகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்திருக்கும் உயரழுத்த பிரிவினரிடம் இருந்து ‘நெட்வொர்க் சார்ஜ்’ என ஒரு யூனிட்டுக்கு ரூ.1.04ம், தாழ்வழுத்த பிரிவினருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.59-ம் மின்வாரியம் வசூலிக்கிறது.
இந்தக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து கடந்த 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் அந்தக் கட்டணத்தை வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியது.
இந்நிலையில், கட்டணம் ரத்து செய்யப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்த மின்வாரியம், கடந்த மாதம் தடை உத்தரவு பெற்றது. இந்த உத்தரவைப் பயன்படுத்தி தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் மீண்டும் ‘நெட்வொர்க் சார்ஜ்’ வசூலிக்கப் படுகிறது.
இதையடுத்து, தடை உத்தரவு பெற்ற நிறுவனத்துக்கு மட்டும் நெட்வொர்க் கட்டணத்தை வசூலிக்குமாறும், மற்ற நிறுவனங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்றும் மின்வாரிய தலைவரிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை மீது மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.