சென்னை: மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து வரும் ஜூலை 6-ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதை அனல், நீர், காற்றாலை மற்றும் எரிவாயு உள்ளிட்ட மின்னுற்பத்தி மூலம் மின்வாரியம் பூர்த்தி செய்து வருகிறது. இதில், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் கட்டாயம் இருக்க வேண்டும்.
இதில், காற்றாலை, நீர் மற்றும் சூரியசக்தியை உள்ளடக்கிய மற்ற வகை மின்சாரம் மட்டுமே இருந்தது. மத்திய மின்துறை அறிவுறுத்தலின் படி, தற்போது முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சேர்க்கப்பட உள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் மொத்த மின் கொள்முதலில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தின் பங்கு 2.10 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2029-30ம் ஆண்டில் 4.50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்து கேட்டுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி வரை பொதுமக்களும், தொழில் துறையினரும் கருத்து தெரிவிக்கலாம்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரகள் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் அதிக திறன் உடைய சூரியசக்தி மின்நிலையத்தை நிலங்களில் அமைக்கின்றன. இதுதவிர, வீடு, நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களின் மேல் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யலாம்.
இதை ஊக்குவிக்க தற்போது மேற்கூரை சூரியசக்தி மின்நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதை அமைப்பதால் தனிநபரின் மின்கட்டண செலவு குறைவதோடு, மின்வாரியத்தின் மின்சாரம் கொள்முதல் செலவும் குறையும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.