சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது.
பின்னர் படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.75,000 கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஆக.6) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.74,960-க்கு விற்பனையானது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.