மதுரை: தனியார் விமான நிறுவனம் சார்பில் மதுரை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கியது. முதல் நாளில் அபுதாபியில் இருந்து 134 பயணிகள் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், பிற்பகல் 2.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் அபுதாபிக்கு பயணித்தனர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைபெறும். பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக புதிய விமான சேவை தொடங்கும்போது, விமான நிலையத்தில் அந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தால் அபுதாபி – மதுரை விமானத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை” என்று அதிகாரிகள் கூறினர்.