கோவை: ஈரான் – இஸ்ரேல் இடையே நடக்கும் போர் காரணமாக இன்று (ஜூன் 24) அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஷார்ஜாவிற்கு வாரத்தில் ஐந்து நாட்களும், அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்களும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் போர் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து கோவை விமான நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியது: கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விமான சேவை வழங்கப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து அபுதாபிக்கு இன்று மதியம் 2.50 மணிக்கு வழக்கம் போல விமானம் இயக்கப்பட்டது. மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணித்தனர்.
கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்ற ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் கோவையில் இருந்து ஷார்ஜா, அபுதாபிக்கு வழங்கப்படும் விமான சேவைகளில் தினமும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். எனவே, விமான சேவை நிலை குறித்து பயணிகள் விமான நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.