போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை திருவல்லிக்கேணியில் இது செயல்படுகிறது. இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள், ரூ.10,427 கோடி முதலீடு செய்துள்ளனர். ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
தற்போது இந்நிறுவனம் 50ம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பணம் பெருக்கும் எனும் திட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு ஓராண்டுக்கு 8.10 முதல் 5 ஆண்டுகளுக்கு 8.50 சதவீதம் வரை அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யும் பட்சத்தில் ஓராண்டில் ரூ.54,175, 5 ஆண்டுகளில் ரூ.76,140 வழங்கப்படும்.
அதே நேரம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு 8.25 முதல் 5 ஆண்டுகளுக்கு 9 சதவீதமும் அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ரூ.54,254 முதல் ரூ.78,025 வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.tdfc.in என்ற இணையதளம் அல்லது 044 2533 3930 என்ற எண்ணில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.