பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைதள பக்கத்தில், ‘‘நான் கடந்த சில மாதங்களாக தோசை சுடும் ரோபோவை வடிவமைத்திருக்கிறேன். காஸ் அடுப்பில் தோசை கல்லை வைத்துவிட்டால், இந்த ரோபோ தானாகவே தோசை சுட்டு தரும். இந்த ரோபோவுக்கு திண்டி (சிற்றுண்டி) என பெயர் வைத்துள்ளேன்.
என் வீட்டில் பெண்கள் தோசை சுட கஷ்டப்பட்டதால், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளேன்” என குறிப்பிட்டு, ரோபோ தோசை சுடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான பெண்களும் குறிப்பாக திருமணம் ஆகாத ஆண்களும் ‘‘இந்த ரோபோ எப்போது சந்தைக்கு வரும்” என ஆர்வமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.