சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை சந்தையில் எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது. பின்னர் படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று (ஆக.6) தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.75,000-ஐ கடந்திருந்தது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று (ஆக.7) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,400-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,200 என்ற புதிய உச்சத்தை எட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.75,040-க்கு விற்பனையானது.
கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர், இஸ்ரேல் – ஈரான் போர், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டவற்றின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.