சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலக அளவில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது என்டார்க் பிராண்டின் கீழ் மிக வேகமான ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட நாட்டின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.
புதிய தலைமுறையைச் சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில், அபாரமான செயல்திறன், கம்பீரமான ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதநவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. 6.3 வினாடிகளில் 0-விலிருந்து 60 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 104 கி.மீ. வேகத்தில் செல்லும்.
மல்டிபாய்ன்ட் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டி டெயில் லேம்ப்கள், ஏரோடைனமிக் விங்லெட்கள், சிக்னேச்சர் சவுண்ட் கொண்ட ஒரு ஸ்டப்பி மப்ளர், நேக்டு ஹேண்டில்பார் மற்றும் வண்ண அலாய் சக்கரங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
மேலும் இந்த வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு, எங்கிருக்கிறோம் என்பதை கண்டறியும் லைவ் ட்ராக்கிங், வழிகாட்டும் வசதி உள்ளிட்ட சுமார் 50 வசதிகள் உள்ளன. 4 வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஆரம்ப விலை ரூ.1,19,00 ஆகும்.
இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் பிராண்ட் அன்ட் ஊடக பிரிவு தலைவர் அனிருதா ஹல்தார் கூறும்போது, “என்டார்க் 150 தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் வெளிப்பாடாக உள்ளது. இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.