சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.19) பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.75,000-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760 என விற்பனையானது.
அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஆக.9 முதல் தங்கம் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.320 என குறைந்து ஒரு பவுன் ரூ.73,880 என விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.43 என குறைந்து ஒரு கிராம் ரூ.10,075-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 என குறைந்து ஒரு கிராம் ரூ.7,635-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1,27,100-க்கு விற்பனை ஆகிறது.