எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயி்க்கவும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவதாலும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்வாலும் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இவற்றின் விலையைக் குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறத்தின.
இந்நிலையில் இதுகுறித்து முடிவு எடுப்பது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 25-ம் தேதி கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யப்படும் என சங்கத்தினரால் ஏற்கப்பட்டது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.
இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ. சரவணவேல்ராஜ், கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சின்னசாமி, சங்க உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்தது.