சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.250 என அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்தது. தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (மே 6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 ஆகவும், பவனுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200 ஆகவும் விற்பனையாகி வருகிறது. சர்வதே அளவில் வர்த்தகப் போக்குகளில் நிலையற்றத் தன்மை நீடிக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரிப்பின் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.