சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.74,660 என இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்த அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதோடு இந்தியா மீதான வரி விதிப்பை அதிகரிக்கக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை சங்கடம் கொள்ள செய்துள்ளது.
ஆக.2 (சனிக்கிழமை) முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அன்று கிராம் ஒன்றுக்கு ரூ.140 என விலை உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விலையில் மாற்றமின்றி தங்கம் விற்பனையானது. நேற்று (திங்கட்கிழமை) கிராமுக்கு ரூ.5 என விலை உயர்ந்தது.
இந்த சூழலில் இன்று (ஆக.5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,370-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.82 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,222-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 என விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.125-க்கு விற்பனை ஆகிறது.