ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈக்விரஸ் கூறியிருப்பதாவது: இந்திய நாடு, உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் பொருளாதார நாடாக உள்ளது. இது பெரும்பாலான ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு ரீதியாக சிறந்த நிலையில் உள்ளது. விரைவில் ஜி7 நாட்டு பொருளாதாரங்களை விட இந்தியா முந்திச் சென்றுவிடும்.
தற்போதுள்ள நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தியாவின் கொள்கை சார்ந்த மூலதனச் செலவு, கிராமப்புற நுகர்வில் மீள் எழுச்சி, கட்டமைப்பு உற்பத்தி மாற்றங்கள் ஆகியவை இதை உறுதி செய்கின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈக்விரஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மிதேஷ் ஷா கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சியாக கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாடானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு (2025-2030) 15 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு ஜப்பான் (1 சதவீதத்துக்கும் குறைவாக) மற்றும் ஜெர்மனி (1.3 சதவீதத்துக்கு சற்று அதிகமாக) ஆகியவற்றை விட கணிசமாக அதிகமாக உள்ளது” என்றார்.