புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி கார், மொபைல்போன், கணினி உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்குகள் உள்ளன. பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆட்டோ மொபைல் துறை வளரும் வரி குறைப்பு குறித்து மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் 90 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி வரம்பின் கீழ் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் 18 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்படும். இதன்படி கார், பைக், சிமென்ட், ஏசி, வாஷிங் மெஷின், மொபைல்போன், கணினி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரம்பின் கீழ் வரும். மின்சார வாகனங்களுக்கு தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்போது நாடு முழுவதும் கார், பைக்குகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். ஆட்டோ மொபைல் சந்தை அபார வளர்ச்சி அடையும். தற்போது பழச்சாறு, உலர்ந்த பழங்கள், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவற்றின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.
வீடுகள் விலை குறையும்: சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மீது தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவை 18 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் கட்டுமான செலவு குறையும். வீடுகளின் விலையும் குறையும். நாடு முழுவதும் வீட்டு வசதித் துறை அபார வளர்ச்சி அடையும். சுகாதார சேவைகள் மற்றும் ஆயுள் காப்பீடு பிரிமியம் உள்ளிட்டவற்றுக்கு தற்போது 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவை 5 சதவீதமாகக் குறைக்கப்படும். இதன்மூலம் சுகாதாரத் துறை, காப்பீடு துறை மட்டுமல்லாமல் ஜவுளி துறை அபார வளர்ச்சி அடையும். இவ்வாறு மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விலை குறையும் பொருட்கள்: உணவு வகைகள், காய்கனிகள் மற்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி வரம்புக்கு கீழ் கொண்டு வரப்படும். மேலும் மொபைல் போன்கள், கணினிகள் உள்ளிட்ட மின்ணனு சாதனங்கள், மருந்துகள், உரங்கள், வேளாண் விளைபொருட்கள், கைவினை பொருட்கள், சைக்கிள் ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறையும்.
குறிப்பாக ரூ.1,000-க்கு உட்பட்ட ரெடிமேட் ஆடைகள், காலணிகள் ஆகியவற்றின் விலை 7 சதவீதம் வரை குறையும். ரூ.80,000 மதிப்புக்கு உட்பட்ட டிவி மற்றும் மின்னணு பொருட்களின் விலை ரூ.8,000 வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல ரூ.40,000 மதிப்புள்ள பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை ரூ.4,000 வரை குறைய வாய்ப்பிருக்கிறது. தங்கம், வெள்ளி நகைகளுக்கு தற்போது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பில் எந்த மாற்றம் செய்யப்படாது.
விலை உயரும் பொருட்கள்: புகையிலை பொருட்கள், மதுபானங்கள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும். சொகுசு கார், விலை உயர்ந்த பைக்குகளும் இந்த வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்படும். சுருக்கமாக சொல்வதென்றால் பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்கள் மற்றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்கள் அனைத்துக்கும் 40 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தின்போது போலி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும். கடந்த ஆண்டு போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பதால் பல்வேறு பொருளாதார சவால்கள் எழுந்து உள்ளன. இந்த சூழலில் ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டு சந்தை அபரிதமிதமான வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும்.