புதுடெல்லி: எந்தவொரு சைபர் அச்சுறுத்தல்களையும் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வர்த்தக உறுப்பினர்களுக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ரான்சம்வேர், விநியோகச் சங்கிலி ஊடுருவல், டிடிஓஎஸ் தாக்குதல், வலைத்தள சிதைப்பு, மால்வேர் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இடர்பாடுகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்.
நமது நாட்டின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறையில் செயல்படும் அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக இண்டியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது” என பிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து வங்கிகள் தங்களது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள தங்களது கிளைகளில் வங்கிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளன.