
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.

