சென்னை: கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும் மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது’ என, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: “இந்தியாவில் கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது.
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், விவசாயிகள், உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளை இக்கண்காட்சி ஏற்படுத்தி தரும்.
மேலும், அனைத்து பங்குதாரர்களும் மீன்வளர்ப்பு மற்றும் கடல் உணவு துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்து, வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், இத்துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த புதுப்பிப்பையும் பெறுவதற்கு இக்கண்காட்சி வழி வகுக்கும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.