புதுடெல்லி: உலகளாவிய நிறுவனங்களின் சீனா ப்ளஸ் ஒன் உத்தியால் இந்திய துறைமுகங்கள் அதிக அளவில் நன்மைகளைப் பெறும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூடிஸ் மேலும் கூறியுள்ளதாவது: சீனா ப்ளஸ் ஒன் உத்தியின்படி உலகளாவிய நிறுவனங்கள் சீனாவுக்கு அப்பால் இந்தியாவில் தங்களது உற்பத்தி மையம் மற்றும் விநியோக நெட்வொர்க்குகளை பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால், இந்திய துறைமுகள் பெரிதும் பயனடையக்கூடும். அதேநேரம், சீன துறைமுகங்கள் உடனடி நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க முடிவெடுத்துள்ளதால் இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் துறைமுகங்களின் செயல்பாடுகளும் பெரிய அளவில் விரிவடையும்.
சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தால் வளரும் நாடுகளின் சந்தைகளில் அழுத்தத்தம் ஏற்பட்டதை உணர முடிந்தது.
இந்தியாவின் மாறுபட்ட ஏற்றுமதி துறைகள் மற்றும் வலுவான உள்நாட்டு சந்தை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க வரிகளால் ஏற்படும் தாக்கம் மிக குறைவாகவே காணப்பட்டது. இது வர்த்தக பாதிப்பு என்ற அடிப்படையில் மற்ற பொருளாதாரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
உலகளாவிய உற்பத்தி முறைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதால் இந்திய துறைமுகங்களின் வளச்சிக்கான அம்சங்கள் சாதகமாக உள்ளது. இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.