புதுடெல்லி: சந்தைகள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் வேலை செய்ய வேண்டும் என்பதை இந்திய போட்டி ஆணையம் உறுதிப்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) 16-வது ஆண்டு தின விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் வர்த்தகத்தில் சுதந்திரமான சந்தை செயல்பாட்டை பாதுகாப்பதற்கு போட்டி கண்காணிப்பு அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
சந்தை கொள்கையை ஜனநாயகப்படுத்துவதே தாராளமயமாக்கல் உணர்வை பாதுகாப்பதற்கான திறவுகோல். அந்த வகையில் 2002-ல் போட்டி சட்டம் இயற்றப்பட்டது சந்தை சார்ந்த இந்தியாவின் பயணத்தில் ஒரு மிக முக்கிய சீர்திருத்தமாகும். அதிகப்படியானவற்றை கட்டுப்படுத்தும் வேளையில் தாராளமயமாக்கல் உணர்வை பாதுகாப்பதில் போட்டி ஆணையத்தின் பங்கு முக்கியமானது.
போட்டி சட்டமானது சந்தைகளில் போட்டியை ஊக்குவிப்பதையும், நிலைநிறுத்துவதையும், நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதையும், வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்வதையும், போட்டியின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் நடைமுறைகளை தடுப்பதையும் போட்டி ஆணையத்தை கட்டாயப்படுத்துகிறது. சந்தை ஒரு சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் வேலை செய்ய வேண்டும் என்பதை போட்டி ஆணையம் உறுதி செய்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.