புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் விமானப்படை மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வெற்றிகரமாக முறியடித்தது. இதில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள கண்காணித்து 400 கி.மீ தூரம் வரை எஸ்-400 ஏவுகணைகள் வானில் இடைமறித்து தாக்கின. போர் விமானம், ஏவுகணை, ட்ரோன் என எதுவந்தாலும், 4 வித ஏவுகணைகள் மூலம் இது நடுவானில் இடைமறித்து அழிக்கும்.
இதனால் எஸ்-400 ஏவுகணை யூனிட்டுகளை இந்தியாவுக்கு கூடுதலாக விநியோகிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ரஷ்யாவும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்-400 ஏவுகணைக்கு இந்தியாவில் ‘சுதர்ஸன சக்கரம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் அழித்துவிட்டாக பாகிஸ்தான் கூறியது. இந்த ஏவுகணைகள் இருக்கும் பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பாக். கூறியது பொய் என்பதை நிருபித்தார்.