சேலம்: சர்வதேச அளவில் நிலவும் போர்ச்சூழல், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஆகியவை காரணமாக, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், சேலத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்ட விவசாயிகளால் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதில், தமிழக அளவில் ஈரோடு மற்றும் சேலம் ஆகியவை மஞ்சள் விற்பனையின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மஞ்சள் அறுவடைக் காலமாக இருந்து வருகிறது. இதனால், மஞ்சள் விற்பனை மையங்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மஞ்சள் அதிக எண்ணிக்கையிலான மூட்டையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.
அறுவடைக் காலத்தில் வரத்து அதிகமாக இருப்பதால், மஞ்சள் விலை சரிவடைந்திருக்கும். அறுவடைக் காலம் முடிந்த பின்னர், வரத்து குறையும்போது மஞ்சள் விலை அதிகரிக்கத் தொடங்கும். இந்நிலையில், அறுவடைக் காலம் முடிந்த பின்னரும் சேலத்தில் உள்ள விற்பனை மண்டிகளில் மஞ்சள் விலை ஏறாத நிலையில், தற்போது குவிண்டாலுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.
இது குறித்து மஞ்சள் மண்டி உரிமையாளர் தரணிகுமார் கூறியது: “சர்வதேச அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர், இஸ்ரேல் – காசா இடையிலான போர் என போர்ச்சூழல் காணப்படுகிறது. இதேபோல், அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அங்கு இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதன் காரணமாக, உலக நாடுகளுக்கான மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகளவு மஞ்சள் விளைவிக்கப்ட்டாலும், அதில் அதிகளவு ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மஞ்சளுக்கு அதிக தேவை இல்லாத நிலை உள்ளது. எனவே, சேலம் லீ பஜார் விற்பனை மையங்களில் மஞ்சள் விலை குறைந்துள்ளது. சீசன் காலத்தில் வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை வரத்து இருந்தது. தற்போது வாரத்துக்கு 1,000 மூட்டை அளவுக்கு மட்டுமே மஞ்சள் வரத்து உள்ளது. விலையைப் பொறுத்தவரை மஞ்சள் குவிண்டால் ரூ.13,000 முதல் ரூ.16,000 வரை விற்பனையாகிறது. சீசனில் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், இது குவிண்டாலுக்கு ஆயிரம் வரை குறைவாகும்,” என்றார்.