புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி, ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி, ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.
நடப்பாண்டு ஜனவரியில் ரூ.1.96 லட்சம் கோடி, பிப்ரவரியில் ரூ.1.84 லட்சம் கோடி, மார்ச் மாதம் ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது. கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியை தொட்டது. இந்த சூழலில் கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
இது கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது 16.4 சதவீதம் அதிகம் ஆகும். மே மாதத்தில் உள்ளூர் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.1.9 லட்சம் கோடியும், இறக்குமதி பொருட்கள் மூலமாக ரூ.46,913 கோடியும் ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் குறு, சிறு, நடுத்தர, கார்பரேட் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி பொருட்களை விற்பனை செய்யும். இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் சாதனை அளவாக ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. கடந்த மே மாதத்திலும் கணிசமான அளவு ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்திருக்கிறது. இது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது” என்று தெரிவித்தனர்.