சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் நேற்று 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,225-க்கும், ஒரு பவுன் ரூ.65,800-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.65 என பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.8,290, ஒரு பவுன் விலை ரூ.66,320 ஆக உயர்ந்தது.
பிற்பகலில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.120, ஒரு பவுனுக்கு ரூ.960 என மீண்டும் உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு பவுன் ரூ.67,280-க்கும் விற்பனையானது. மொத்தத்தில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்ததால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.
24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ரூ.73,392 ஆக இருந்தது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.103-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.104-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,04,000 ஆக இருந்தது.