புதுடெல்லி: ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு மீண்டும் இன்று தொடங்குகிறது. ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள் (ஒயிட் பொருட்கள்) தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஏப்ரல் 16-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் அதிக அளவில் இத்துறையில் முதலீட்டை ஈர்க்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ரூ.6,238 கோடியில் 7 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதுவரை இந்த திட்டத்துக்காக 83 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பாளர்கள் பிஎல்ஐ திட்டத்துக்கான 4-வது சுற்று விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை (இன்று) மீண்டும் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிக முதலீடு செய்ய தொழில் துறையினர் விரும்புவதால் விண்ணப்பப் பதிவு மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த 30 நாட்களுக்கு (அக்டோபர் 14) விண்ணப்பிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க செல்போன், மின்னணு சாதன உற்பத்தி உட்பட மொத்தம் 14 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறை வாரியான குறைகளை நீக்குதல், பெருமளவு உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைதான் பிஎல்ஐ திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ரூ.1.9 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.17 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி அதிகரித்து 12.3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.