சென்னை: ஊராட்சி பகுதிகளில் எந்தெந்த தொழில் தொடங்க உரிமம் பெற வேண்டும் என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி சட்டங்களி்ல் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த தொழிலுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி தையல் பொருட்கள், தையல் இயந்திரங்கள் உற்பத்தி, அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தி, மின்சார மோட்டார்கள் மற்றும் பம்புகளின் உற்பத்தி, மின்சார மோட்டார்கள் மற்றும் பம்புகளை சேமித்து விற்பனை செய்தல், கல் வெட்டுதல், காகித பொருட்களின் உற்பத்தி, அனைத்து வகையான உலோகங்களின் உற்பத்தி, பாத்திரங்கள் மற்றும் பாத்திரங்களை உற்பத்தி செய்தல், மோட்டார்கள் மற்றும் பம்புகளின் உற்பத்தி, தொழில் துறை எந்திரங்களின் உற்பத்தி, மோட்டார் வாகன பாகங்கள் உற்பத்தி, கட்டுமான பொருட்களின் உற்பத்தி, பொறியியல் பணிகள், செங்கல் அறைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரித்தல், அழகு சாதன பொருட்களின் உற்பத்தி, நாட்டுப்புற மருத்துவம், அழகுசாதன பொருட்கள் மற்றும் மூலிகை பொருட்களின் உற்பத்தி, கட்டுமானப் பணிகள் உட்பட 48 தொழில்களுக்கு உரிமம் பெற வேண்டும்.
கடைகளை பொறுத்தவரை 119 சேவை தொழில்களாக பட்டியலிட்டு உள்ளனர். அதில் பேன்சி கடைகள், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஜெராக்ஸ் கடை, போட்டோ பிரேமிங். பொற்கொல்லர்கள், கிரானைட் கடைகள், சலூன்கள், தையலகம், சலவையகம், காலணி, மொபைல், சைக்கிள் கடைகள், அச்சகம், ஜவுளி, நகைக்கடை, சாமில்ஸ், அரிசி ஆலைகள், இறைச்சி – மீன் கடைகள், உணவு பொருள் தயாரித்தல், நாட்டு மருந்து கடை, அழுகு சாதன பொருட்கள், மருந்து கடை, டீ கடை, வாட்ச் கடை, பார்சல் சேவை, கூரியர் சேவை உள்ளிட்ட 119 கடைகள் அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.