ஹன்சல்பூர்: உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஹன்சல்பூரில் மாருதி நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. இது 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு இ-விடாரா மின்சார கார் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. ஹன்சல்பூர் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் இ-விடாரா மின்சார காரை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் என்ற திட்டத்தில் முக்கிய மைல்கல்லை நாம் எட்டி உள்ளோம். இந்த ஆலை இந்தியா, ஜப்பான் இடையிலான நட்புறவின் சின்னமாக விளங்குகிறது. இப்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஓடும் மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். ஹன்சல்பூர் மாருதி சுசூகி ஆலையில் தயாரிக்கப்படும் இ-விடாரா கார் உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. விரைவில் உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்.
மின்சார கார் உற்பத்திக்கு தேவையான பேட்டரிகள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஹன்சல்பூர் மாருதி சுசூகி ஆலையிலேயே ஹைபிரிட் பேட்டரி உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள், ஆம்புலன்ஸ்களை ஹைபிரிட் மின்சார வாகனங்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குமாறு மாருதி சுசூகி நிறுவனத்தை கேட்டுக் கொண்டேன். இதை சவாலாக ஏற்று 6 மாதங்களில் ஹைபிரிட் மின்சார ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான மாதிரியை அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ளது. நாடு முழுவதும் ஓடும் பழைய வாகனங்கள், ஹைபிரிட் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டால் காற்று மாசு கணிசமாக குறையும்.
மின்சார ஆம்புலன்ஸ் வாகனங்களுக்காக பிஎம் இ-டிரைவ் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக செமி கண்டக்டர் துறையில் அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறோம். நாடு முழுவதும் 6 செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். செமி கண்டக்டர் துறையிலும் இந்தியா சாதனை படைக்கும். அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டிப் பிடிக்க முடியும்.
உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக இப்போது தெளிவான விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். ஜப்பானிய நிறுவனங்கள் சார்பில் இந்தியாவில் கார்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த பொருட்களும் இந்திய தயாரிப்புகள்தான். அவை இந்திய மண்ணில், இந்தியர்களின் கடின உழைப்பு, வியர்வையால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை 100 சதவீதம் உள்நாட்டுப் பொருட்கள் ஆகும்.
ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம், இந்தியாவின் சர்வதேச தூதராக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். விரைவில் ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது இந்திய, ஜப்பான் உறவு மேலும் வலுப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குஜராத்தின் ஹன்சல்பூர் ஆலையில் மாருதி நிறுவனம் ரூ.21,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் ஓராண்டில் 7.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். வரும் 2026-ம் ஆண்டில் ஹன்சல்பூர் ஆலையில் 67,000 இ-விடாரா மின்சார கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.